விளையாட்டு

மாநில அளவிலான வாலிபால் போட்டி- கோப்பையைத் தட்டிச் சென்ற கொங்குப்பட்டி அணி!

 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே சக்கரசெட்டிப்பட்டியில் மாநில அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்றது. இதில் கொங்குப்பட்டி அணி முதலிடம் பிடித்து கோப்பையைத்தட்டிச் சென்றது.

ஓமலூர் அருகே உள்ள சக்கரசெட்டிப்பட்டி ஊராட்சியில் மாநில அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்றது. ஆண்டுதோறும் தீபாவளியையொட்டி, சிறப்பு வாலிபால் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் சேலம், நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.

இரவு ஆட்டமாக நடந்த இந்த வாலிபால் போட்டியில் காடையாம்பட்டியின் கொங்குப்பட்டி தாலுக்கா அணி, புதுக்கடை அணி, தளவாய்பட்டி அணி, போச்சம்பள்ளி போலீஸ் அணி உள்ளிட்ட அணிகள் அரையிறுதிப் போட்டியில் கலந்து கொண்டு விளையாடினர்.

சிறப்பாக விளையாடிய கொங்குப்பட்டி அணியும், புதுக்கடை அணியும் இறுதிப் போட்டியில் மோதினர். இதில் 25-23 என்ற கணக்கில் புதுக்கடை அணியை வீழ்த்தி கொங்குப்பட்டி அணி முதலிடம் பிடித்து, கோப்பையைத் தட்டிச் சென்றது.