ட்ரெண்டிங்

சமையல் கூடத்தில் மனிதக்கழிவுப் பூசப்பட்ட விவகாரம்- பள்ளியில் எம்.எல்.ஏ. சதாசிவம் ஆய்வு!

 

மேட்டூர் அருகே சமையல் கூடத்தில் மனிதக்கழிவுப் பூசப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து, பா.ம.க.வைச் சேர்ந்த மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் பள்ளிக்கு சென்று நேரில் ஆய்வு செய்தார்.

 

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள காவேரிபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலை உணவுத்திட்ட சமையல் கூடத்தில் அடையாளம் தெரியாத நபர்கள், மனிதக்கழிவைப் பூசினர்.

 

இது குறித்து ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் செய்தி வெளியான நிலையில், அன்று மாலை அதிகாரிகள் ஆய்வுச் செய்து, தூய்மைப் பணியாளர்கள் மூலமாக சமையல் கூடம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. குடிநீர் தொட்டி உள்ளிட்டவைகளுக்கும் பூட்டும் போடப்பட்டது.

 

இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், மேட்டூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் சதாசிவம், அரசு அதிகாரிகளுடன் பள்ளிக்கு சென்று நேரில் ஆய்வுச் செய்தார்.

 

இதையடுத்து, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சதாசிவம் எம்.எல்.ஏ., பள்ளிக்கு இரவு நேரங்களில் காவலாளிகளை நியமிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.