ட்ரெண்டிங்

தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்குமாறு தமிழ் ஆர்வலர்களுக்கு அழைப்பு!

சேலம் மாவட்டத்தில் 2023-ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருது பெறுவதற்கு தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

 

தமிழ் வளர்ச்சித் துறையில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் "தமிழ்ச் செம்மல் விருது" 2015- ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்ச்செம்மல் விருது பெறுபவர்களுக்கு ரூபாய் 25,000 பரிசுத் தொகையும், தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் 2023- ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

விருதுக்குரிய விண்ணப்பப் படிவத்தினை தமிழ் வளச்சித் துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் (அல்லது) சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிப்பவர்கள் தன்விவரக் குறிப்பு, நிழற்படம் இரண்டு, அவர்கள் ஆற்றிய தமிழ்ப்பணி ஆகிய விவரங்களுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் வரும் அக்டோபர் 10- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

 

குறிப்பாக, தமிழ்ச் செம்மல் விருது வேண்டுவோர் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படும் விருதுகள் ஏதும் இதற்கு முன் பெற்றிருக்கக் கூடாது. மேலும், அகவை முதிர்ந்த தமிழறிஞர், எல்லைக் காவலர், தமிழறிஞர் நிதியுதவி பெற்று வருபவராகவும் இருத்தல் கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.