ட்ரெண்டிங்

ஏடிஎம் மையத்தில் பேட்டரிகளைத் திருடிய இளைஞர் கைது!

கெங்கவல்லி அருகே பட்டப்பகலில் கனரா வங்கியின் ஏடிஎம் மையத்தில் நுழைந்து, இரண்டு பேட்டரிகளைத் திருடிச் சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். 

 

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கெங்கவல்லியில் உள்ள கனரா வங்கியின் ஏடிஎம் மையத்தில் இயந்திரங்களைப் பழுதுப் பார்ப்பது போல் உள்ளே நுழைந்து பேட்டரிகளை இளைஞர் ஒருவர் திருடியுள்ளார். 

 

இது குறித்து கனரா வங்கியின் மேலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வுச் செய்தனர். அதைத் தொடர்ந்து, சதீஸ்குமார் என்ற இளைஞரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். 

 

அதில், ஏடிஎம் மையங்களில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களுக்கு சதீஸ்குமார் பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்ததும், அந்த வேலையில் இருந்த போது, லட்சக்கணக்கில் பணம் கையாடல் செய்த வழக்கும் அவர் மீது இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. 

 

வேலை எதுவும் இல்லாத நிலையில், ஆன்லைன் ரமமி விளையாடி பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததாகவும் சதீஸ்குமார் காவல்துறையினரின் விசாரணையில் தெரிவித்துள்ளார். அவரிடம் இருந்து இருசக்கர வாகனமும், இரண்டு பேட்டரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.