ட்ரெண்டிங்

சேலம் சேகோசர்வ் கூட்டுறவுச் சங்கத்தின் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு!

சேகோசர்வ் தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்கூட்டுறவுச் சங்கமாகும். சேகோசர்வில் 374 உறுப்பினர்கள் உள்ளனர். இந்தியாவிலேயே ஜவ்வரிசிக்கு என்று ஒரே ஒரு விற்பனை கேந்திரமாக சேகோசர்வ் சங்கம் செயல்பட்டு வருகிறது. ஜவ்வரிசியானது ஒரு பாரம்பரியமிக்க ஒரு உணவு பொருளாகும். ஜவ்வரிசியானது வடமாநில மக்களால் புனிதமிக்க உணவுப் பொருளாக மிக முக்கியமான நவராத்திரி, துர்கா பூஜை போன்ற திருவிழா காலங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

சேலம் சோகோவுக்கான புவியியல் குறியீடு சான்றிதழ், உணவுப்பொருள் வகைப்பாட்டு பிரிவு 30ன் கீழ் பெறப்பட்டுள்ளது. பழனி பஞ்சாமிர்தம், சேலம் வெண்பட்டு, சேலம் மல்கோவா மாம்பழம் மற்றும் திருப்பதி லட்டு போன்ற பிரபலமான தயாரிப்புகளுடன் சேலம் சேகோவும் தற்போது இணைந்துள்ளது. இது சேகோ தயாரிப்பின் தனித்துவத்தையும், நம்பகத்தன்மையையும் மேம்படுத்தவும், புதிய சந்தை வாய்ப்பை உருவாக்கவும், சேகோ மற்றும் சேகோ சார்ந்த உற்பத்திப் பொருட்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளில் முக்கியத்துவம் அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவுகிறது. 

புவிசார் குறியீடு பெற்றதின் மூலம் ஜவ்வரிக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனால் மரவள்ளிக்கிழங்கு பயிரிடும் அனைத்து விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும். ஜவ்வரிசி மற்றும் மரவள்ளிக்கிழங்கு மாவில் இருந்து தயாரிக்கப்படும் பல்வேறு வகையான மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களின் மதிப்பும் அதிகரிக்கும். மேலும் ஜவ்வரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அதிகளவில் வாய்ப்பு உள்ளது. இதனால் இந்திய பொருளாதாரமும் மற்றும் உலக பொருளாதாரமும் மேம்படும் நிலை ஏற்படும். 

பாரம்பரியமிக்க ஜவ்வரிசிக்கு சேலம் சேகோ என்ற பெயரில் புவிசார் குறியீடு பெறும் முயற்சியில் ஈடுபட்டு தற்சமயம், சேலம் சேகோ என்ற புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளது. மேற்படி சான்றிதழை பெறும் விழா சேகோசர்வ் சங்கத்தில் நடைபெற்றது. 

மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்ற விழாவில், தமிழக அரசு புவிசார் குறியீடு பதிவுப் பெற்ற பொருட்களின் நோடல் அலுவலர் சஞ்சய்காந்தி, புவிசார் குறியீடு சான்றிதழை வழங்கினார். கூட்டத்தில், அரசு உயரதிகாரிகள், வியாபாரிகள், விவசாயிகள், சேகோசர்வ் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.