ஆன்மிகம்

குட்டையில் வெள்ளி பட்டறைத் தொழிலாளியின் சடலம்!

சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் அசோகன் (வயது 45). வெள்ளி பட்டறை ஒன்றில் வேலைச் செய்து வருகிறார். இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், சேனைப்பாளையத்தில் உள்ள வண்ணாரக்குட்டையில் சடலம் மிதப்பதாக கொண்டலாம்பட்டி காவல்துறையினருக்கு தொலைபேசி மூலம் தகவல் கிடைத்துள்ளது. 

இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். இதையடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்பு உபகரணங்களுடன் குட்டையில் இறங்கி, சடலத்தை கரை பகுதிக்கு கொண்டு வந்தனர். 

அதைத் தொடர்ந்து, காணாமல் போனதாக புகார் அளித்திருந்த அசோகனின் குடும்பத்தினரை வரவழைத்து, இவர் அசோகன் தானா? என்பதை உறுதிச் செய்தனர். குடும்பத்தினர் இவர் காணாமல் போன அசோகன் தான் எனத் தெரிவிக்க, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனர். 

இது குறித்து வழக்குப்பதிவுச் செய்துள்ள காவல்துறையினர், அசோகான் தற்கொலைச் செய்துக் கொண்டாரா? அல்லது தவறி குட்டையில் விழுந்துவிட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.