ட்ரெண்டிங்

குரூப் 4 தேர்வர்களின் கவனத்திற்கு! 

இளைஞர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு நாளை (ஜூன் 09) நடைபெறுகிறது. கிராம நிர்வாக அலுவலர், வனக்காவலர், கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர் என பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் கடந்த ஜனவரி மாதம் 30- ஆம் தேதி வெளியிட்டிருந்தது. 

இதற்கான அடிப்படை கல்வி தகுதி 10- ஆம் வகுப்புத் தேர்ச்சி என்ற போதிலும், முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள் உள்பட 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் தகுதியான விண்ணப்பத்தாரர்களுக்கு ஆன்லைனில் ஹால் டிக்ஸ்ட் வழங்கப்பட்டது. 

இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு மையங்களிலும்  குரூப் 4 எழுத்துத்தேர்வு நாளை (ஜூன் 09) நடைபெறுகிறது. காலை 09.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும் என்றும், ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் சென்றுவிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்தாண்டு ஜனவரி மாதம் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. ஏற்கனவே அறிவித்திருந்தது.