ட்ரெண்டிங்

பெரியார் பல்கலைக்கழகத்தில் கலைஞர் நினைவுப் பொழிவரங்கம்

பெரியார் பல்கலைக்கழகத்தில் கலைஞர் நினைவுப் பொழிவரங்கம்

 

கலைஞர் நினைவு தினத்தையொட்டி முத்தமிழறிஞர் தமிழவேள் கலைஞர் மு.கருணாநிதி ஆய்வு மையத்தின் சார்பில், கலைஞர் நினைவுப் பொழிவரங்கம் இன்று (07.08.2023) நடைபெற்றது.

 

பல்கலைக்கழக ஆட்சிப் பேரவைக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞர் ஆய்வு மைய இயக்குநர் இரா.சுப்பிரமணி வரவேற்றார். புல முதன்மையர் எஸ்.கண்ணன் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் ஆவணப்பட இயக்குநர் பு.சாரோன் திரை இலக்கிய வானில் கலைஞர் என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் “தங்களுடைய முன்பு வைக்கப்படும் புத்தகங்களை புரட்டிப் பார்க்க விருப்பமில்லாத இளைய தலைமுறை உருவாகி வருகிறது. இச்சூழல் வருத்தம் அளிக்கிறது. புத்தக வாசிப்பினை இளைஞர்கள் முக்கியமானதாக எடுத்துக் கொள்ள வேண்டும். கலைஞருடன் இருந்த முக்கியத் தலைவர்கள் அனைவரும் மெத்தப் படித்த பட்டதாரிகள். எனினும் அண்ணாவுக்குப் பிறகு அவரை முதலமைச்சராக எம்.ஜி.ஆர் முன்மொழிந்தார். 18 வயதில் திராவிட நாட்டில் எழுதிய கலைஞர், 20 வயதில் பெரியாரிடம் குடியரசு பத்திரிகையில் பணியாற்றினார். மேலும் நாடக எழுத்திலும் ஆர்வமாக இருந்தார். 1947-ல் ஒரே வாரத்தில் தூக்குமேடை என்ற நாடகத்தை எம்.ஆர்.ராதா கேட்டதின் பேரில் எழுதினார். அந்த நாடகத்தில் கதாநாயகனாக  கலைஞரும் வில்லனாக எம்.ஆர்.ராதாவும் நடித்தனர். ஒத்திகையில் இல்லாத வசனங்களை எம்.ஆர்.ராதா கேள்வியாக கேட்டபோது, அதற்கு சளைக்காமல் பதிலளித்த கலைஞரின் திறமையை பார்த்து “கலைஞர்” என்ற பட்டத்தை எம்.ஆர்.ராதா வழங்கினார்.அபிமன்யூ திரைப்படத்தில் வசனம் எழுதிய நிலையில், அவருடைய பெயர் இடம்பெறாததால் மனம் தளரவில்லை. மறுக்கப்பட்ட இடத்திலேயே தவிர்க்க முடியாத நபராக மாறியது கலைஞரின் சாதனை.1949-ல் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்திற்கு கதை வசனம் எழுத டி.ஆர்.சுந்தரம் அழைப்பின் பேரில் கலைஞர் வந்தார். மந்திரிகுமாரி கதை வசனம் எழுத வாய்ப்பு வந்தபோது, அதில் கதாநாயகனாக எம்.ஜி.ஆருக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று கலைஞர் கேட்டு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். இந்தப் படத்திற்கு பிறகு என்.எஸ்.கிருஷ்ணன் எடுத்த மணமகள் படத்தின் சிறப்பான பணிக்காக கலைஞருக்கு கார் வாங்கி கொடுத்தார். இதனையடுத்து மலைக்கள்ளன் படத்திற்கு வசனம் எழுதினார். இவ்வளவு சிறப்புக்கு பின்னரே கலைஞரின் பெயரை எம்.ஜி.ஆர் முதல்வராக முன்மொழிந்தார்.

 

பராசக்தி படத்தில் சிவாஜி கணேசனை மாற்ற வேண்டும் என்று தயாரிப்பாளர் சொன்னபோது, அவரே இருக்க வேண்டும் என கலைஞர் வலியுறுத்தினார். 1952-ல் பராசக்தி படம் வெளிவந்தது. அந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் ஒரே நாளில் சிவாஜி உச்சத்திற்கு சென்றார். சமூகத்தின் கொடுமைகளை பராசக்தி படத்தின் மூலம் கடுமையான விமர்சனங்களை வசனமாக கலைஞர் முன்வைத்தார். கை ரிக்சா கொடுமையை விமர்சித்த நிலையில் ஆட்சிக்கு வந்து முதல்வரானதும் கலைஞர் அந்த முறையை ஒழித்தார். சுயமரியாதை திருமணம் குறித்த முன்னெடுப்பும் பராசக்தியில் வசனமாக வந்திருந்தது. மரத்தடியில் இருப்பவர்கள் மாளிகைக்கு வர வேண்டும் என்று 1952-ல் வசனம் எழுதியவர் குடிசை மாற்று வாரியம் தொடங்கி சமத்துவபுரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். எம்.ஜி.ஆர் சிவாஜி என்கிற இருபெரும் கதாநாயகர்களை தமிழ்ச்சமூகத்தில் கொண்டு சேர்த்த பெருமை கலைஞரையே சேரும். 75 திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய கலைஞர் மற்ற எழுத்துப் பணிகளையும் அயராமல் மேற்கொண்டார். அரசியலில் ஏற்பட்ட மனச்சோர்வை தன்னுடைய எழுத்துப்பணியால் போக்கிக் கொண்டார். நாம், ரங்கூன் ராதா,பூம்புகார் உள்ளிட்ட பாடல்களில் பல பாடல்களை எழுதி பாடலாசிரியர் பணியை கலைஞர் செய்துள்ளார். கலை, இலக்கியத்தின் மூலம் கிடைத்த பதவிகளைக் கொண்டு சமூகத்திற்கு பயனளிக்கும் பல்வேறு திட்டங்களை கலைஞர் தமிழ்நாட்டிற்கு வழங்கினார். தனக்கு கிடைத்த வாய்ப்புகளை வைத்து, தனக்கு கிடைக்காத வாய்ப்புகளை மற்றவர்களுக்கு உருவாக்கி கொடுத்த பெருமை கலைஞரையே சேரும் என்று ஆவணப்பட இயக்குநர் பு.சாரோன் பேசினார்.

 

இதனையடுத்து, கலைஞரின் பகுத்தறிவுப் பயணம் என்ற தலைப்பில் ஆசிரியர் பழ.புகழேந்தி பேசியது.

 

கலைஞர் இல்லை என்றான பிறகு, அந்த வெறுமை மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கி விட்டது. சூனிய வெறியை உணர்கிறபோதுதான் கலைஞரின் அருமை தெரிகிறது. சினிமா எனும் வலுவான ஊடகத்தை, தனித்த மொழி கட்டமைப்பினை உருவாக்கி பயன்படுத்திய கலைஞர், அதன்மூலம் இளைஞர்களிடம் தன்னுடைய கருத்துகளை கொண்டு சேர்த்தார். கலைஞரின் எழுத்து என்பதை அவரின் பெயரை குறிப்பிடாமலேயே தெரிந்து கொள்ளும் அளவிற்கு கலைஞரின் எழுத்து அமைந்துள்ளது. பகுத்தறிவு பாதையில் அவரது வாழ்நாளின் இறுதி வரை சிறிதளவும் மாறாமல் வாழ்ந்திருக்கிறார். பகுத்தறிவு வாதிகள் தன்னுடைய சிந்தனையை மற்றவர்கள் மீது திணிக்காமல் அவர்களுக்கு விழிப்புணர்வை மட்டுமே ஏற்படுத்துகிறார்கள். மாற்று சிந்தனை கொண்டவர்களின் சுதந்திரத்தையும் மதித்து கடைசி வரை கலைஞர் பின்பற்றினார் என்றார்.

 

இந்நிகழ்வில் முனைவர் பட்ட ஆய்வாளர் நா.இல.நரேன் குமார் நன்றி கூறினார்.