ட்ரெண்டிங்

பல்கலைக்கழகங்களின் நிதி சார்ந்த பிரச்சனைகளை சரி செய்ய உயர்மட்டக்குழு அமைப்பு! 

தமிழக பல்கலைக்கழகங்களின் நிதி சார்ந்த பிரச்சனைகளை சரி செய்ய தமிழக அரசின் உயர்கல்வித்துறை உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது. 

சென்னை பல்கலைக்கழகம் உள்பட சில பல்கலைக்கழகங்களில் நிதி நெருக்கடி குறித்தும், பல்கலைக்கழக வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியதால் எழுந்துள்ள பிரச்சனைகள் குறித்தும் செய்திகள் வெளியானது. 

இதன் எதிரொலியாக, தமிழக பல்கலைக்கழகங்களில் நிதி சார்ந்த பிரச்சனைகளை சரி செய்ய உயர்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, பல்கலைக்கழகங்களில் நிலுவையில் உள்ள கணக்குகளை தணிக்கை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கணக்கு தணிக்கையில் போது, பல்கலைக்கழகத்தின் பதிவாளர் உயர்மட்டக் குழுவின் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும், உயர்மட்டக் குழு காலாண்டிற்கு ஒருமுறை கூட வேண்டும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.