தன் மீதான விசாரணைக்கு தடைக்கோரி, பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இரு மதத்தவரிடையே வெறுப்புணர்வைத் தூண்டியதாக பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை மீது சேலம் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சேலம் நீதிமன்றம், அண்ணாமலைக்கு உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, தன் மீதான மனுவை ரத்துச் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை மனுத்தாக்கல் செய்திருந்தார். புகார் மனுவை உயர்நீதிமன்றம் ரத்துச் செய்ய மறுத்ததை எதிர்த்து அண்ணாமலை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
வரும் பிப்ரவரி 26- ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபான்கர் தத்தா அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.