ட்ரெண்டிங்

மேட்டூர் அணையில் முதன்மை தலைமைப் பொறியாளர் திடீர் ஆய்வு! 

கடந்த ஆண்டைக் காட்டிலும், நடப்பாண்டில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் குறைவான அளவே மழை பெய்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் இருந்து பிலிகுண்டுலுவுக்கு வரும் தண்ணீர் வரத்து குறைந்துள்ள நிலையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் குறைந்துள்ளது. 

குறிப்பாக, வினாடிக்கு 100 கனஅடிக்கு  மேல் தண்ணீர் வந்துக் கொண்டிருக்கிறது. எனினும் குறுவைச் சாகுபடிக்காக, மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 9,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென சரிந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 59 அடியாகக் குறைந்துள்ளது. 

இந்த நிலையில், தமிழக பொதுப்பணித்துறையின் முதன்மை தலைமைப் பொறியாளர் முத்தையா, மேட்டூர் அணையின் உபரி நீர் திட்டமான சரபங்காத் திட்டத்தை ஆய்வுச் செய்தார். அதேபோல், அணையின் வலது கரை, இடது கரை பூங்கா, பவள விழா கோபுரம் உள்பட முக்கிய பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். 

அதைத் தொடர்ந்து, மேட்டூர் அணையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, பொதுப்பணித்துறையைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகள் உடனிருந்தனர்.