ட்ரெண்டிங்

ஆத்தூரில் சேலம் மாவட்ட ஆட்சியர் அதிரடி ஆய்வு!

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமானது, சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில் இன்று (பிப்.21) தொடங்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, பொதுமக்களின் இடங்களுக்கே சென்று. குறைகளைக் கேட்டு. உடனுக்குடன் தீர்வுகாண, அரசு இயந்திரம் களத்திற்கே சென்று பணியாற்றும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் சென்னை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும், ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை நடத்தப்படும் என அரசின் வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறியும் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாமானது. இன்றையதினம் காலை 09.00 மணிக்கு சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டத்தில் தொடங்கியுள்ளது. ஆத்தூர் வட்டத்திற்குட்பட்ட 30 வருவாய் கிராமங்களிலும் அலுவலர்கள் இன்றும், நாளையும் கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்வு காண திட்டமிடப்பட்டுள்ளது.

ஆத்தூர் வட்டத்தில் களப் பணிக்குச் செல்லும் அலுவலர்கள் இன்றைய தினம் காலை 09.00 மணி முதல் 01.30 மணி வரை இ-சேவை மையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம், சத்துணவுக் கூடங்கள், வேளாண் கிடங்குகள், பள்ளிகள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்கிறார்கள்.

மேலும், பகல் 02.30 மணி முதல் 04.30 வரை ஆத்தூர் வட்டத்தில் உள்ள அரசுத் துறை அலுவலர்களின் கருத்துக்கள் அடிப்படையிலான ஆய்வுக் கூட்டமும் நடத்தப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை பொதுமக்களுடனான கலந்துரையாடலும், மாலை 06.00 மணி முதல் தொடர்புடைய வட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள தெரு விளக்குகளின் செயல்பாடுகள், பூங்காக்கள். நூலகங்கள், பேருந்து நிலையங்கள், அரசு விடுதிகள், பொது மற்றும் சமுதாய கழிவறைகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளன.

கள ஆய்விற்குச் செல்லும் அலுவலர்கள் அப்பகுதிகளில் தங்கி நாளைய தினம் அதிகாலை 06.00 மணி முதல் அவ்வட்டத்தில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகள், குடிநீர் வசதிகள், பொதுப் போக்குவரத்துச் சேவை, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், பால் விநியோகம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளனர்.

அந்தவகையில், இன்றையதினம் ஆத்தூர் வட்டம், அம்பாசமுத்திரம் ஊராட்சியில் உள்ள நூலகத்தில் ஆய்வு செய்து, புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டுமென அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், நூலகத்திற்கு வருகைதரும் வாசகர்களின் தேவைகள் குறித்து கேட்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அம்பாசமுத்திரம் ஊராட்சிப் பகுதியில் சிண்டெக்ஸ் தொட்டி மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பின்னர். இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதிகள், சுகாதார வசதிகள், பள்ளி வளாக தூய்மை உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதேபோன்று, வருகைப் பதிவேடுகளை ஆய்வு செய்து, மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் குறித்து கேட்டறியப்பட்டது. மேலும், இராமநாதபுரம் ஊராட்சியில் உள்ள பால் குளிரூட்டும் நிலையத்தில் உள்ள இயந்திரங்கள் மற்றும் பாலின் தரத்தை பரிசோதனை செய்யும் கருவி, பால் சேமிக்கப்படும் சேமிப்பு கலன் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, துலுக்கனூர் ஊராட்சிப் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் தடுப்பணைகள் பலப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, கல்லாநத்தம் ஊராட்சிப் பகுதியில் பொது சுகாதார வளாகம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், முட்டல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மற்றும் முட்டல் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட துவக்கப் பள்ளிகளில் ஆய்வு செய்து மாணவ, மாணவிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதிகள், சுகாதார வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்தும், மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் குறித்தும், உண்டி உறைவிடப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தயார் செய்யப்பட்டு வரும் மதிய உணவின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.