ட்ரெண்டிங்

கிளாம்பாக்கம், மாதவரத்தில் இருந்து சேலத்திற்கு பேருந்துகள்!

 

சென்னை கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களில் சேலம் மாவட்டத்திற்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

 

இது குறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நாளை (ஜன.30) முதல் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது.

 

கிளாம்பாக்கத்தில் இருந்து 710 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 160 பேருந்துகளும் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும். திருச்சி, சேலம், விருத்தாச்சலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கும்பகோணம், சிதம்பரம், நெய்வேலி, கடலூர் வழியாக புதுச்சேரி, திண்டிவனம், திருவண்ணாமலை வழியாக செஞ்சி, போளூர், வந்தவாசி உள்ளிட்ட இடங்களுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படும்.

 

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சேலத்திற்கு 66 பேருந்துகளும், மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து சேலத்திற்கு 17 பேருந்துகளும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.