பல்லடம் செய்தியாளர் மர்மநபர்களால் தாக்கப்பட்டச் சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளச் செய்திக் குறிப்பில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒன்றின் செய்தியாளர் நேசபிரபு நேற்று அடையாளம் தெரியாத சில நபர்களால் தாக்கப்பட்ட செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். ஊடக செய்தியாளர் மீதான இந்த தாக்குதல் நிகழ்ச்சி மிகவும் கண்டனத்திற்குரியது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சம்பவம் நடப்பதற்கு முன்பாக செய்தியாளர் நேசபிரபு, காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரியதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் உடனடியாக காத்திருப்போர் பட்டியலில் வைக்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
மேலும் இதனை ஒரு சிறப்பு நிகழ்வாக கருதி, மருத்துவ சிகிச்சையில் உள்ள நேசபிரபுவுக்கு பத்திரிகையாளர் நல வாரியத்திலிருந்து ரூபாய் 3 லட்சம் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார். இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.