சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு வருகை தரவுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த இந்தியா கூட்டணி மாணவர் சங்கங்கள் திட்டமிட்டுள்ளனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக் கூட்டத்தை நடத்துவதற்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஜன.11) சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் சேலம் கமலாபுரம் விமான நிலையத்திற்கு வருகிறார். பின்னர், விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக பல்கலைக்கழகம் செல்லவுள்ளார்.
பல்கலைக்கழக முறைகேடு தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆளுநரின் வருகைக்கு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக, இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் மாணவர்கள் அணி சார்பில் ஆளுநர் ஆர்.என்ரவிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எழிலரசன் மற்றும் அரவிந்தசாமி அறிவித்துள்ளனர்.
இதற்காக காவல்துறையிடம் அனுமதிக்கோரி கடிதமும் வழங்கியுள்ளனர். இதனிடையே, சேலம் விமான நிலையம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.