ட்ரெண்டிங்

பிரபல ரவுடி சேலம் நீதிமன்றத்தில் சரண்!

 

நெல்லையைச் சேர்ந்த பிரபல ரவுடி சேலம் நீதிமன்றத்தில் இன்று (டிச.04) காலை 11.00 மணிக்கு சரணடைந்தார்.

 

கடந்த 2002- ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த பிலாலுதீன் என்பவர், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இவரை 7 பேர் கொண்ட கும்பல் கடத்த முயற்சி செய்தது. இந்த வழக்கு தொடர்பாக, நெல்லையைச் சேர்ந்த பிரபல ரவுடி ராக்கெட் ராஜா என்பவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.

 

எனினும், ராக்கெட் ராஜா தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை சேலம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராமஜெயம் பிரபல ரவுடி ராக்கெட் ராஜாவிற்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.

 

இதனையடுத்து, இன்று (டிச.04) ராக்கெட் ராஜா தனது வழக்கறிஞர்களுடன் சேலம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி முன்பு சரணடைந்தார்.