ட்ரெண்டிங்

புகை பாதிப்பினால் நோயாளிகளுக்கோ, மருத்துவ உபகரணங்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை-மா

 

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின் கசிவினால் ஏற்பட்ட புகை பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம், இன்று (நவ.22) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 

 

பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, இன்று (நவ.22) காலை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல் தளத்தில் மின்கசிவுக் காரணமாக புகை பரவியது. இதனையடுத்து. தீயணைப்புத் துறையினரிடம் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் உடனடியாக புகை பாதிப்பு முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது.

 

இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் அனைவரும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக உள்ளனர். மின்கசிவு ஏற்பட்ட வார்டில் இருந்த 65 நோயாளிகளையும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்கசிவினால் ஏற்பட்ட புகை பாதிப்பினால் நோயாளிகளுக்கோ அல்லது மருத்துவ உபகரணங்களுக்கோ எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை. மேலும், புதிய நோயாளிகள் வருகை தரும்போது அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கவும் தேவையான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

தற்போது பொதுப் பணித்துறையின் மின் பிரிவு அலுவலர்கள் எவ்வாறு மின் கசிவு ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். மருத்துவமனையின் முதல்வர், இணை இயக்குநர் நலப்பணிகள், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் உள்ளிட்டோர் மின்கசிவு ஏற்பட்ட வார்டில் மீண்டும் இயல்பான மருத்துவச் சேவை தொடங்கி நடைபெற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

 

இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி ஆட்சியர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ,சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.