கடந்த ஏப்ரல் 30- ஆம் தேதி அன்று மாலை சேலம் ஏற்காடு செல்லும் மலைப்பகுதியில் பயணிகளுடன் சேலம் நோக்கி சென்ற தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; படுகாயமடைந்த 65 பேர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ஏற்காடு விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 2 லட்சம் தர வேண்டும். சுற்றுலா தலங்களுக்கு வரும் வாகனங்களை முறையாகக் கண்காணிக்க வேண்டும். தமிழக அரசு பழுதடைந்த பழைய பேருந்துகளை அகற்றி புதிய பேருந்துகளை வாங்க வேண்டும்; ஆயுர்வேத சிகிச்சைக்காக நான் கேரளாவுக்கு சென்றதை சொல்ல வேண்டிய தேவை ஏற்படவில்லை; கோடை வறட்சி நிலவும் சூழலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானலில் ஓய்வில் இருந்தார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.