ட்ரெண்டிங்

முதல்முறையாக விமானப் பயணம் மேற்கொள்ளவுள்ள 100 பேருக்கு இலவச விமான டிக்கெட்- எஸ்.ஆர்.பார்த்திப

 

சேலம் விமான நிலையக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் குழுவின் தலைவரும், சேலம் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஆர்.பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விமான நிலைய இயக்குநர் ரமேஷ், தொழில்முனைவோர், காவல்துறையினர் மற்றும் விமான நிறுவன அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சேலம் விமான நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., சேலம் விமான நிலையத்தில் மத்திய அரசின் உதான் திட்டத்தில் பெங்களூர், கொச்சி மற்றும் ஹைதராபாத் நகரங்களுக்கு விமான சேவை அக்டோபர் 16- ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. சேலம்- சென்னை இடையேயான விமான சேவை அக்டோபர் 29- ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் சேலத்தில் இருந்து 2,167 பேர் விமான பயணம் மேற்கொண்டுள்ளனர். விமானம் வாயிலாக சேலத்திற்கு 2,436 பேர் வந்துள்ளனர். 130 முறை விமான சேவை நடைபெற்றுள்ளது. சேலம்-சென்னை விமான சேவை பெரும்பாலும் முழுமையாக பயணிகளுடன் சென்று வருகிறது. அதிக அளவு வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், சேலத்தில் இருந்து திருப்பதி மற்றும் சீரடிக்கு நேரடி விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது நாள்தோறும் 5 விமானங்கள் வந்து செல்லும் நிலையில், இரவு நேரங்களில் விமானங்களை நிறுத்தி வைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். 1,800 மீட்டர் விமான நிலைய ஒடுபாதை தற்போது உள்ளது. இதனை 3 ஆயிரம் மீட்டராக உயர்த்திடும் வகையில், சேலம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விமான நிலைய விரிவாக்கம் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று விவசாயிகள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

சேலத்தில் இருந்து முதல்முறையாக விமானப் பயணம் மேற்கொள்ளும் மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 100 பேருக்கு என்னுடைய சொந்த செலவில் விமான டிக்கெட்டுகளை வழங்க உள்ளேன் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.