ட்ரெண்டிங்

டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை- அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட மேயர் ராமச்சந்திரன்!

 

சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் முன்னிலையில் மாநகராட்சி அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

 

கூட்டத்தில் பேசிய மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், "சேலம் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பருவமழைக்கு முன்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தொற்று நோய் தடுப்பு பணிகளையும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. பருவக்காலங்களில் ஏற்படும் காய்ச்சல் குறிப்பாக டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுக்கள், வீடு மற்றும் வீட்டிற்கு அருகிலுள்ள சரியாக மூடாத நீர் சேமிக்கும் தொட்டிகள், டிரம்கள், குடங்கள், பாத்திரங்கள், டயர்கள், தேங்காய் ஓடுகள், உடைந்த குடங்கள் போன்றவற்றில் தேங்கும் நல்ல தண்ணீரில் உருவாகும் என்பதால், தொழில் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், புதிய சுட்டுமான இடங்கள், காலிமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், திரையரங்குகள் மற்றும் பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் உள்ள நல்ல தண்ணீர் தேங்கும் இடங்களையும், பொருட்களையும் கண்டறிந்து தீவிர கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்" என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 

அதைத் தொடர்ந்து பேசிய மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் இ.ஆ.ப., "அனைத்து பகுதிகளிலும் டெங்கு மற்றும் தொற்று நோய் தடுப்பு பணிகளில் பயன்படுத்துவதற்கு தேவையான பிளீச்சிங் பவுடர், மற்றும் அபேட் மருந்து, கொசு ஒழிப்பிற்கு தேவையான பைரித்ரம் மற்றும் டெக்னிக்கல் மாலத்தையான மருந்துகள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

மக்கள் உபயோகத்திற்காக வைத்திருக்கும் தண்ணீரை சேமிக்கும் கலன்களை கொசுக்கள் புகுந்து முட்டை இடாத வண்ணம் முழுமையாக மூடி வைக்க வேண்டும். இதை செயல்படுத்தும் வகையில் சுகாதார ஆய்வாளர்கள் கண்காணிப்பில் மலேரியா பணியாளர்கள் மற்றும் ககாதார பணியாளர்கள் வீடுதோறும் சென்று டயர், தேங்காய் சிரட்டை உள்ளிட்ட தேவையற்ற பொருட்கள் அகற்றப்பட வேண்டும். பொதுமக்கள் தங்களுடைய குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சுற்றுப்புறங்களிலும் மற்றும் மாடிகளிலும் பார்வையிட்டு தேவையற்ற பொருட்கள் இருக்கும் பட்சத்தில் அவற்றை உடனடியாக அகற்றியும் தொற்று நோய்த்தடுப்பு பணிகளில் சுகாதாரப் பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.

 

இக்கூட்டத்தில், துணை இயக்குநர்/ மாநகர் நல அலுவலர் யோகானந், உதவி ஆணையாளர்கள் சிந்துஜா, திருகதிரேசன், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், தூய்மைப்பணி மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.