ட்ரெண்டிங்

41 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையில் நீர்த்திறப்பு நிறுத்தம்!

பருவமழை காலங்களில் 41 ஆண்டுகளுக்கு பிறகு, தண்ணீர் இல்லாததால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 31 அடியாக சரிந்ததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குடிநீர் தேவைக்காக மட்டும் முதற்கட்டமாக, வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், தேவைக்கேற்ப இதனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இந்த முறை ஜூன் 12- ஆம் தேதி முதல் 120 நாட்களில் 92 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பருவமழை பொய்த்துப் போனதாலும், கர்நாடகா, தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை தாராததாலும், கடந்த 1981- ஆம் ஆண்டுக்கு பிறகு சுமார் 41 ஆண்டுகள் கழித்து டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

 

ஜூன் 12- ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டால், அடுத்தாண்டு ஜனவரி 28- ஆம் தேதி வரை தொடர்ந்து தண்ணீர் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் அணையில் தண்ணீர் இல்லாததால் இந்த முறை 110 நாட்களுக்கு முன்னதாகவே, தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதால், டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.