ட்ரெண்டிங்

வீட்டின் கதவை உடைத்து தங்கம், பணம் கொள்ளை-மர்மநபர்களுக்கு காவல்துறை வலைவீச்சு!

சேலம் மாவட்டம், சூரமங்கலம் அருகே உள்ள ஜாகிர் அம்மாப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் ஷேக் ஆதம் (வயது 21). இவர் தனது சகோதரியைப் பார்ப்பதற்காக, தனது வீட்டைப் பூட்டிவிட்டு, எடப்பாடிக்கு சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய ஷேக் ஆதமுக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது.

 

வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், வீட்டிற்குள்ளே சென்று பார்த்தார். அப்போது, வீட்டின் பீரோவில் இருந்த 10 பவுன் தங்கநகைகள், 4 லட்சம் ரூபாய் பணம் மற்றும் வீட்டு பத்திரம் ஆகியவை திருட்டுப்போனது தெரிய வந்தது.

 

இதையடுத்து, உடனடியாக சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு ஷேக் ஆதம் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர்,சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரில் ஆய்வுச் செய்தனர். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வுச் செய்து வரும் காவல்துறையினர், கொள்ளை அடித்த மர்மநபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

 

இந்த கொள்ளை சம்பவம், ஜாகிர் அம்மாப்பாளையம் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.