ட்ரெண்டிங்

அசுத்தமான குடிநீர்... சேலம் மாநகரில் உள்ள அரசு பள்ளியில் நிலவும் அவலம்!

சேலம் மாநகர் கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். 

இந்த பள்ளியில் பயிலும் மாணவிகளின் அடிப்படை வசதியான குடிநீர், கழிவறை உள்ளிட்டக் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு, பயன்பாட்டிற்கு உள்ளது. 

ஆனால் போதிய பராமரிப்பு இல்லாமல் கழிவறையில் மாணவிகள் பயன்படுத்திய நாப்கின்கள் சுகாதாரமற்ற முறையில் கிடப்பதால் தொற்றுநோய் ஏற்படும் அபாய நிலை உள்ளது.

மேலும் குடிநீர் தொட்டியில் சுத்தப்படுத்தாமல் புழுக்கள், பூச்சிகள், குப்பைகள் கிடப்பதால் தொட்டியில் குடிநீர் மாசடைந்து காணப்படுகிறது.

ஆனால் பள்ளி நிர்வாகம் குடிநீர் தொட்டியை பல மாதங்களாக தூய்மைபடுத்தாமல் மாணவிகளுக்கு மாசடைந்த குடிநீரை வழங்கி வருகிறது. இதனால் இந்த குடிநீரைப் பருகும் மாணவிகளின் உடல்நிலை பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இன்று உணவு இடைவேளையின்போது தண்ணீர் பருகச் சென்ற மாணவிகள் குடிநீரில் புழுக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து தலைமையாசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.அப்போது இரண்டு மாணவிகளையும் முட்டிபோட வைத்து தண்டனை கொடுத்ததாகவும், இதுகுறித்து வெளியில் யாரிடமாவது கூறினால் டிசி கொடுத்து விடுவோம் என தலைமையாசிரியர் மிரட்டியதாக கூறப்படுகிறது.


பின்னர் இதுகுறித்து பள்ளி மாணவிகள் கூறும் போது கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யப்படாமல் மாசடைந்து உள்ளது. இந்த தண்ணீரை குடிக்கும் மாணவிகளுக்கு சளி, காய்ச்சல் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாக புகார் தெரிவித்தனர்.

எனவே, பள்ளி நிர்வாகம் உடனடியாக குடிநீர் தொட்டியைச் சுத்தம் செய்வதோடு இனிவரும் காலங்களில் இது போன்ற நடக்காமல் இருக்க முதன்மை கல்வி அலுவலர் கபீர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.