ட்ரெண்டிங்

மகனை எதிர்பார்க்கும் நிலை இனி பெண்களுக்கு இல்லை- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

தமிழ்நாடு அரசின் சார்பில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு டெபிட் கார்டு வழங்கும் விழா சேலம் மாவட்டம், அழகாபுரத்தில் உள்ள மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் சமுதாயக் கூடத்தில் இன்று (செப்.27) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.

விழாவில், 500 மகளிருக்கு டெபிட் கார்டுகளை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தப் படியாக மாநில அளவில் அதிக பயனாளிகளைக் கொண்ட மாவட்டமாக சேலம் திகழ்கிறது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முற்போக்கான திட்டத்தினை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

தமிழகத்தை பின்பற்றி கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநில அரசுகள் பெண்களுக்கான திட்டத்தை அறிவித்துள்ளன. பெண்களின் வாழ்க்கையை மாற்றும் துருப்புச்சீட்டாக மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் அமைந்துள்ளது. பெண்ணுரிமை குறித்து தந்தை பெரியார் கண்ட கனவை தமிழக அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. அதற்காக மகளிர் முன்னேற்ற திட்டங்களை திராவிட மாடல் அரசு கொண்டு வந்துள்ளது.

மகளிர் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்து 3 முக்கிய விஷயங்களை முறியடித்து தி.மு.க. அரசு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. கலாசார ரீதியாக ஆண், பெண் அடிமைத்தனத்தை உடைத்து மகளிர் கல்வி கற்பதற்கும், வேலைவாய்ப்பை பெறுவதற்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தந்தையின் சொத்தில் பெண்களுக்கான உரிமையை 30 ஆண்டுகளுக்கு முன்னரே கலைஞர் சட்டம் இயற்றி வாங்கி கொடுத்தார். மூன்றாவது தடையான பொருளாதார தடையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் நீக்கியுள்ளார். சிறுமியாக இருக்கும்போது பெற்றோரை, திருமணத்திற்கு பிறகு கணவரை, வயதான பிறகு மகனை எதிர்பார்க்கும் நிலை இனி பெண்களுக்கு இல்லை.

பொருளாதார ரீதியில் பெண்களுக்கு முன்னேற்றம் கிடைக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கியதைப் போலவே புதுமைப் பெண் திட்டம், இலவச பேருந்து பயணத் திட்டம், காலை நேரங்களில் மகளிர் சிரமப்படுவதைத் தடுக்க மாநிலம் முழுவதும் 17 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மகளிர் நலத்திட்டங்களுக்கும் மகுடம் சூட்டியது போல மகளிர் உரிமைத் தொகை திட்டம் அமைந்துள்ளது.

பெண்கள் அனைவரும் பொது வாழ்க்கையில் ஈடுபட வேண்டும்; அரசியலுக்கு வர வேண்டும். இன்றைக்கு உள்ளாட்சிப் பொறுப்புகளில் 50 சதவீத இடங்களில் மகளிர் பதவியில் அமர தி.மு.க. அரசே காரணம். இன்றைக்கு வாட்ஸ்-அப் –ல் நிறைய தகவல் வருகிறது. அதில் உண்மை எது பொய் எது என பிரித்து பார்த்து பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உண்மையை விட பொய் செய்திகள் வேகமாக பரவுகின்றன. மகளிர் அனைவரும் அனைத்து விஷயங்களையும் முற்போக்காக பகுத்தறிவுடன் சிந்தித்துப் பார்த்து செயலாற்ற வேண்டும். அப்போது அவர்களுக்கு பிறக்கும் அனைத்து குழந்தைகளும் பகுத்தறிவுடன் பிறந்து தமிழ் சமுதாயம் முன்னேறிய சமுதாயமாக மாற முடியும்.

பொருளாதாரத்தில் பெண்கள் முன்னேறுவது நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வரும் முதல்வரின் தூதுவர்களாக மகளிர் செயலாற்ற வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விழாவில், முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, அமைச்சர் கே.என்.நேரு, ராஜேந்திரன் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.