ட்ரெண்டிங்

விநாயகர் சிலை ஊர்வலம், சிலை கரைப்பு தொடர்பான சேலம் மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சேலம் மாநகரப் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நாளை (செப்.20) நீர்நிலைகளில் கரைக்கப்படவுள்ள நிலையில், சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

அதில், சேலம் மாநகரப் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொதுமக்களால் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நாளை (செப்.20) காலை 10.00 மணிக்குள் சேலம் மாநகர எல்லைக்குட்பட்டப் பகுதிகளில் இருந்து எடுத்துச் சென்று, திட்டமிட்ட நீர்நிலைகளில் கரைத்திடல் வேண்டும். இவற்றுள் மூக்கனேரியில் கரைக்க திட்டமிட்டுள்ளவர்கள் நாளை (செப்.20) நண்பகல் 12.00 மணிக்குள் கொண்டு சென்று கரைத்திடல் வேண்டும்.

 

இந்து அமைப்புகளின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நாளை (செப்.20) காலை 11.00 மணிக்குள் சம்மந்தப்பட்ட பகுதிகளிலிருந்து எடுத்து, ஊர்வலம் புறப்படும் இடமான எல்லை பிடாரியம்மன் கோவில் அருகில் கொண்டு வந்து உரிய வழிமுறைகளைப் பின்பற்றி மாலை 06.00 மணிக்குள் மூக்கனேரியில் கரைத்திடல் வேண்டும்.

 

 

விநாயகர் சிலை கரைத்தல் சம்மந்தமான பாதுகாப்பு பணிக்கு ஊர்க்காவல் படையினர் உட்பட மொத்தம் 1,232 காவலர்கள் ஈடுபட உள்ளனர். சேலம் மாநகரில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலப் பாதையான எல்லைப் பிடாரியம்மன் கோவில் முதல் மூக்கனேரி வரையிலான சாலையில் பொதுமக்களின் வசதிக்காக நாளை (செப்.20) போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

நாளை (செப்.20) மதியம் 02.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை சுந்தர் லாட்ஜ் முதல் அஸ்தம்பட்டி ரவுண்டானா வரை பயணிப்பவர்கள், அண்ணா பூங்கா, 4 ரோடு, ராமகிருஷ்ணா ரோடு மற்றும் அஸ்தம்பட்டி வழியாகவும், அஸ்தம்பட்டியில் இருந்து மூக்கனேரி வரை பயணிப்பவர்கள், மாவட்ட ஆட்சியர் பங்களா, ஐயந்திருமாளிகை, கன்னங்குறிச்சி வழியாகவும் பயணிக்கலாம். இவ்வாறு மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.