ட்ரெண்டிங்

சேலத்தில் சமத்துவ விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடிய மக்கள்!

சேலம் மாவட்டம், பொன்னம்மாப்பேட்டையில் உள்ள தம்பி காளியம்மன் கோவில் தெருவில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒரே பகுதியில் ஒற்றுமையாக பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் ஒன்றுச் சேர்ந்து ஆண்டுதோறும் சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடுவது வழக்கம்.

 

அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும், ஓம் சக்தி நண்பர்கள் குழு சார்பாக 29- ஆம் ஆண்டு சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விநாயகருக்கு சிறப்பு அலங்காரமாக சிவவிநாயகர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அலங்கார பந்தலில் சிலுவை, ஓம், 786 ஆகிய மும்மத சின்னங்களும் மின் விளக்கு ஒளியில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.

 

ஒலிபெருக்கியில் விநாயகர் பக்தி பாடல், இஸ்லாமிய பக்தி பாடல், கிறிஸ்தவ பக்தி பாடல்கள் என மாறி மாறி ஒலிபரப்பப்படுகிறது. இந்த பகுதியில் உள்ள அனைத்து மதத்தினரும் வந்து விநாயகரை வழிபட்டு செல்கின்றனர். விநாயகருக்கு சிறப்பு பூஜைகள், தீப ஆராதனைகளுக்கு பிறகு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 

மும்மத மக்களும் ஒன்று கூடி விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடுவது, மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது என அனைவரும் பாராட்டினர்.