ட்ரெண்டிங்

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள்- அரசியல் கட்சியினர் மரியாதை!

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115- வது பிறந்தநாளையொட்டி, சேலம் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள அண்ணாவின் முழுத் திருவுருவச் சிலைக்கு தி.மு.க.வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சேலம் வடக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன் தலைமையில் தி.மு.க.வின் மாமன்ற உறுப்பினர்கள், கட்சியின் நிர்வாகிகள் மலர் மாலையை அணிவித்து மரியாதைச் செலுத்தினர்.

 

அதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், திராவிட மாடல் அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்.

 

அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க.வின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சேலம் மாநகர் மாவட்டச் செயலாளருமான வெங்கடாசலம் தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வராஜ், சக்திவேல், ரவிச்சந்திரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர்.

 

அதேபோல், ம.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும், அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர்.