ஆன்மிகம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவுக் கொடுத்த கூலித்தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை - நீதிமன்றம் பரபரப

'சிறுமிக்கு பாலியல் தொந்தரவுக் கொடுத்த கூலித்தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை'- நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு! 

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள தகரபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ் (வயது 47). கூலித்தொழிலாளியான இவர், கடந்த 2021- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10- ஆம் தேதி அன்று அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமிக்கு உணவு வாங்கித் தருவதாகக் கூறி, அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவுச் செய்துள்ளார். 

வீட்டிற்கு சென்ற சிறுமி நடந்ததை பெற்றோரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றைக் கூறி புகார் அளித்துள்ளனர். 

இதையடுத்து, சார்லஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதைத் தொடர்ந்து, இந்த வழக்கு சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பாக நீதிபதி ஜெயந்தி நேற்று (ஆகஸ்ட் 30) தீர்ப்பளித்துள்ளார். அதன்படி, சார்லஸுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூபாய் 1,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சார்லஸை காவல்துறையினர், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.