ட்ரெண்டிங்

பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியையிடம் தங்கச் செயின் பறிப்பு!

சேலம் மாவட்டம், கருப்பூர் அருகே உள்ள கோட்டகவுண்டம்பட்டியில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வரும் தம்பதி ராஜசேகரன்- சுகன்யா (வயது 35). கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக உதவிப் பேராசிரியராக சுகன்யா பணியாற்றி வருகிறார். 

இவர் வழக்கம் போல் தனது பணியை முடித்து விட்டு, பெரியார் பல்கலைக்கழகத்தில் இருந்து நேற்று (ஆகஸ்ட் 28) இரவு 08.00 மணியளவில் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, பெரியார் பல்கலைக்கழகத்தின் எதிரே உள்ள மேம்பால கீழ் பகுதியில் சென்றுக் கொண்டிருந்த சுகன்யாவை, இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த இரண்டு பேர், சுகன்யா அணிந்திருந்த 2 பவுன் தங்க செயினைப் பறித்துச் சென்றனர். 

இது குறித்து கருப்பூர் காவல் நிலையத்தில் சுகன்யா புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தியும், மர்ம நபர்களைத் தேடியும் வருகின்றனர்.