சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை அகற்றுவதற்காக அரசு வழங்கிய காலக்கெடு இன்று நிறைவடைந்த நிலையில், சீலநாயக்கன்பட்டியில் உள்ள கடைகளையும் உடனடியாக அகற்ற வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் டாஸ்மாக் கடைகள் செயல்படுவதால் பெண்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், மது அருந்த வருபவர்கள் சாலையோரங்களில் அமர்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டினர்.
பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி, கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.


