ட்ரெண்டிங்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை - போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!

சேலம் மாவட்டம், சூரமங்கலம் அருகே உள்ள ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குபேந்திரன் (வயது 23). இந்த இளைஞர் சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மின்சாதன விற்பனை கடை ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2018- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஆறாம் வகுப்புப் படித்த 12 வயது சிறுமிக்கு குபேந்திரன் பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார். 

இதையடுத்து, வீட்டிற்கு சென்ற சிறுமி நடந்ததை பெற்றோரிடம் கூற, அவர்கள் உடனடியாக சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து, குபேந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கு சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பான வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி ஜெயந்தி, குபேந்திரனுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூபாய் 2,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.