சேலம் மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே உள்ள சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமாயி (வயது 72). மூதாட்டி தனது சொந்த வீட்டில் வசித்து வந்த நிலையில், பல்வேறு காரணங்களால் தனது வீட்டை, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருவரிடம் விலைக்கு விற்பனை செய்துள்ளார். அத்துடன், சில ஆண்டுகள் இங்கேயே தங்கிக் கொள்வதாகவும் வீட்டை வாங்குபவரிடம் மூதாட்டி கூறியுள்ளார்.
இந்த நிலையில், வீட்டை விற்பனை செய்து சுமார் ஐந்து ஆண்டுகள் ஆகும் நிலையில், அங்கேயே மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில், வீட்டை வாங்கியவர் மூதாட்டியிடம் வீட்டைக் காலிச் செய்யும் படி கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த ராமாயி விஷம் குடித்துத் தற்கொலைச் செய்துக் கொண்டார்.
வீட்டில் மயங்கிக் கிடந்த மூதாட்டியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனையில் மூதாட்டி ராமாயியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சாஸ்திரி நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.