ட்ரெண்டிங்

மின்சாரம் பாய்ந்து கட்டிட தொழிலாளி உயிரிழப்பு!

சேலம் மாவட்டம், கொல்லப்பட்டிப் பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன் (வயது 27). இவர் கட்டிடக் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், பூபாலன், அழகுசமுத்திரத்தில் உள்ள வீட்டில் வேலைக்கு சென்றுள்ளார். அந்த வீட்டில் சில கட்டிட வேலையை செய்து வந்த பூபாலனின் கை எதிர்பாராத விதமாக, அந்த வழியே சென்ற மின்சார வயர் மீது பட்டுள்ளது. 

இதில், பூபாலனை மின்சாரம் தாக்கிய நிலையில், கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் மற்றும் அருகில் இருந்தவர்கள், பூபாலனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், பூபாலன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். 

இதையடுத்து, பூபாலனின் தாய் கிருஷ்ணவேணி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவுச் செய்த தாரமங்கலம் காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், பூபாலனின் உடல் பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பூபாலன் கடைசியாக வேலை செய்த வீட்டிலும் காவல்துறையினர் நேரில் ஆய்வுச் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.