ட்ரெண்டிங்

நம்ம ஊரு திருவிழாவிற்கான கலைக் குழுக்கள் தேர்வு!

கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் சங்கமம் நம்ம ஊரு திருவிழாவிற்கான கலைக் குழுக்கள் தேர்வு சேலம் மாவட்டத்தில் வருகின்ற மார்ச் 22, 23 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் சங்கமம் நம்ம ஊரு திருவிழாவிற்கான கலைக் குழுக்கள் தேர்வு சேலம் மாவட்டத்தில் வருகின்ற மார்ச் 22 மற்றும் மார்ச் 23 ஆகிய நாள்களில் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பில் சென்னையில் பொங்கல் விழாவின்போது, தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கலைகள், அயல் மாநில நாட்டுப்புறக் கலைகள், செவ்வியல் கலைகள் இடம் பெறும் வகையில் சென்னை- நம்ம ஊரு திருவிழா சென்னையில் 18 இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. 

கடந்த ஆண்டு கோயம்புத்தூர், தஞ்சாவூர், வேலூர், சேலம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய 8 இடங்களில் நம்ம ஊரு திருவிழா நடத்தப்பட்டது. இவ்வாண்டும் மேற்காண் 8 இடங்களிலும் இக்கலை திருவிழா நடத்தப்பட உள்ளது. இவ்விழாவில் நிகழ்ச்சி நடத்த விரும்பும் கலைக்குழுக்களுக்களின் நிகழ்ச்சி பதிவு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வருகின்ற மார்ச் 22, 23 ஆகிய நாள்களில் காலை 10.00 மணி வரை முதல் மாலை 05.00 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. 


நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், பறையாட்டம். பம்பை கைச்சிலம்பாட்டம், இறை நடனம், துடும்பாட்டம், ஜிக்காட்டம், கிராமிய பாட்டு மற்றும் பல்சுவை நிகழ்ச்சி வழங்கும் கலைக்குழுக்கள் மார்ச் 22- ஆம் தேதி அன்றும், தெருக்கூத்து, இசை நாடகம், நாடகம், கனியான் கூத்து, பொம்மலாட்டம், தோல்பாவைக் கூத்து, வில்லுப்பாட்டு, தேவராட்டம், ஒயிலாட்டம்,  சிலம்பாட்டம், மல்லர் கம்பம், கும்மி, கோலாட்டம், மரக்கால் ஆட்டம், பரதநாட்டியம், பழங்குடியினர் நடனம் நிகழ்ச்சி நடத்துவோர் மற்றும் இதர கலைக்குழுக்களின் நிகழ்ச்சிகள் மார்ச் 23- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்றும் சேலம் மாவட்டத்தில் மண்டலக் கலை பண்பாட்டு மைய அலுவலகம், திருப்பதிகவுண்டனூர் சாலை, ஆவின் பால் பண்ணை எதிரில் சேலம் 636302 என்ற இடத்தில் நிகழ்ச்சி பதிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மாவட்ட அளவிலானத் தேர்வில் பங்கு பெற விரும்பும் கலைக் குழுக்கள் கலை பண்பாட்டுத் துறையின் இணையதளத்தில் www.artandculture.tn.gov.in என்ற வெளியிடப்பட்டுள்ள கூகுள் பார்ம் (Google Form) மூலம் வரும் மார்ச் 20- ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் அல்லது சேலம் மாவட்டத்திற்கான பொறுப்பாளர் ராமச்சந்திரன் 99526- 65007 என்ற எண்ணில் தொடர்புக் கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். கலைஞர்களின் கோரிக்கையின் அடிப்படையில் 38 மாவட்டங்களிலும் கலைக்குழுக்களின் நிகழ்ச்சி பதிவு செய்யப்பட உள்ளது. இப்பதிவுக்கு வரும் கலைஞர்களுக்கு மதிப்பூதியம், போக்குவரத்து செலவினங்கள் வழங்கப்படாது. 

ஒவ்வொரு கலைக்குழுவின் 5 நிமிட வீடியோ பதிவு செய்யப்பட்டு கலை பண்பாட்டுத் துறையால் அமைக்கப்படும் தேர்வுக் குழுவால் தமிழ்நாட்டில் 8 இடங்களில் நடைபெற உள்ள சங்கமம் திருவிழாவில் நிகழ்ச்சி வழங்குவற்கான கலைக்குழுக்கள் தேர்வு செய்யப்படுவார். இவ்விழாக்களில் சிறப்பான நிகழ்ச்சி வழங்கிய கலைக்குழுவினர் மாநில அளவிலான தேர்வுக்குழுவால் தெரிவு செய்யப்பட்டு 2026-ஆம் ஆண்டு சென்னை சங்கமம் விழாவில் வாய்ப்பு பெறுவார்கள். கலை பண்பாட்டுத் துறை அளித்துள்ள இந்த வாய்ப்பினை அனைத்து நிகழ்த்துக் கலைஞர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.