தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை 2025- 2026 சேலம் மாநகராட்சி, நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகள் என மொத்தம் சேலம் மாவட்டத்தில் 100 இடங்களில் நேரலை செய்யப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசின் நிதிநிலை அறிக்கை 2025-2026 இன்றைய தினம் நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்நிகழ்வு அனைத்து பொதுமக்களுக்கும் தெரியப்படுத்தும் வகையில் சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தும் முதல்முறையாக நேரலை செய்யப்படுகிறது.
அந்த வகையில், சேலம் மாநகராட்சியில் பழைய பேருந்து நிலையம், தாதகாப்பட்டி ஆகிய 2 இடங்களிலும், ஆத்தூர், நரசிங்கபுரம், மேட்டூர், எடப்பாடி, இடங்கணசாலை, தாரமங்கலம் ஆகிய நகராட்சிகளில் பொதுமக்கள் கூடும் 6 இடங்களிலும், 20 ஊராட்சி ஒன்றியங்களில் 40 இடங்களிலும், அதேபோன்று பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் 52 இடங்களிலும் என மொத்தம் சேலம் மாவட்டம் முழுவதும் 100 இடங்களில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை நேரலை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் திரையிடப்பட்டது.
இதுதவிர செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் ஆத்தூர் பேருந்து நிலையம், நரசிங்கபுரம், வாழப்பாடி பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு நேரலை செய்யப்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களும் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையினை நேரலையில் காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
மேலும் நாளையதினம் (மார்ச் 15) நடைபெறவுள்ள வேளாண்மை நிதிநிலை அறிக்கை பட்ஜெட்கூட்டத்தொடரும் இதேபோன்று பொதுமக்கள் அறியும் வகையில் நேரலை செய்ய அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


