ட்ரெண்டிங்

உணவகத்தின் பூட்டை உடைத்துப் பணத்தைத் திருடிய முதியவர் கைது!

சேலம் மாவட்டம், அம்மாப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் செந்தில். இவர் அம்மாப்பேட்டையில் உள்ள ரவுண்டானா பகுதியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக உணவகத்தை நடத்தி வருகிறார். வழக்கம் போல், தனது உணவகத்தைப் பூட்டி விட்டு சென்ற செந்தில், மறுநாள் காலை உணவகத்தைத் திறக்க வந்த போது, பூட்டு உடைந்து கிடந்துள்ளது. 

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த செந்தில், கடைக்குள் நுழைந்து கல்லாப்பெட்டியைப் பார்த்துள்ளார். அதில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 2,000 திருடுப் போனது தெரிய வந்தது. இதையடுத்து அம்மாப்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று செந்தில் புகார் அளித்தார். 

அதைத் தொடர்ந்து, விரைந்து வந்த காவல்துறையினர், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடி வி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வுச் செய்தனர். அதில், முதியவர் ஒருவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. 

அந்த காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், அம்மாப்பேட்டையில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிந்த முதியவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இருசன் (வயது 67) என்பதும், உணவகத்தின் பூட்டை உடைத்து பணத்தைத் திருடியதையும் அவர் ஒப்புக்கொண்டார். 

இதைத் தொடர்ந்து, அவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் இருந்து ரூபாய் 2,000 ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.