வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களையொட்டி, 1,250 சிறப்புப் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. பயணிகள் எந்தவித சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக, சென்னையில் இருந்து கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மட்டுமின்றி கோவை, மதுரை, சேலம், நெல்லை, திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் நாளை (ஆகஸ்ட் 18) மற்றும் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 19) இயக்கப்படவுள்ளது. தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் நாளை 500 பேருந்துகளும், நாளை மறுநாள் 350 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கு 400 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 1,250 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. சொந்த ஊரில் இருந்து சென்னை, பெங்களூரு திரும்பும் பயணிகளின் வசதிக்காக, ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பு பேருந்து இயக்கப்படும் எனக் கூறியுள்ளது.