ட்ரெண்டிங்

சேலத்தில் இளைஞர் இலக்கிய திருவிழா- 2025!

 

பொது நூலக இயக்ககம், சேலம் மாவட்ட நூலக ஆணைக்குழு, அரசு மகளிர் கலைக்கல்லூரி இணைந்து இளைஞர் இலக்கிய திருவிழா- 2025, ஜன.06, 07 ஆகிய 2 நாட்கள் கல்லூரியில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் காந்திமதி வரவேற்புரையாற்ற, சேலம் மாவட்ட நூலக அலுவலர் விஜயகுமார் தலைமை உரையாற்றினார். 

 

அதில் மாணவர்களுக்கு படைப்பாற்றல் சிந்தனை திறன் எழுத்தாற்றல் பேச்சாற்றல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார்; மாணவர்களின் படைப்பாற்றல் எழுத்துத்திறன் இலக்கிய ஆர்வம் போன்றவற்றை ஊக்குவிக்க தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பொது நூலக இயக்ககம் மூலம் இளைஞர் இலக்கிய திருவிழாவானது நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சேலம் நூலக ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், மாணவர்கள் நல்ல வாசிப்பு திறனை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்; அதுக்கு ஏதுவாக மாவட்ட நூலகத்தில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளது. அதை நல்ல முறையில் பயன்படுத்தி மாணவர்கள் போட்டி தேர்வில் வெற்றி பெற்று வாழ்வில் சாதிக்கலாம். இக்கல்லூரின் முதல்வரின் பரிந்துரையாலும், கல்லூரி நூலக பொறுப்பாளரின் உந்துதல்லாலும் ஏறத்தாழ 2,000 உறுப்பினர்கள் இக்கல்லூரியில் இருந்து சேலம் மாவட்ட நூலகத்தில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.

 

முதல் நாளன்று இலக்கிய வினாடி-வினா, இரண்டு நிமிட பேச்சுப்போட்டி, உடனடி ஹைக்கூ, ஓவியப்போட்டி, புத்தகத் திறனாய்வு போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. 2-ம் நாள் அன்று ஆறு நிமிட இலக்கிய பேச்சுப்போட்டி, நூல் அறிமுகப் போட்டி, விவாத மேடை, படத்தொகுப்பு உருவாக்கம் மற்றும் பிராம்ப்ட் இன்ஜினியரிங் போட்டிகள் நடத்தப்பட்டன. 

 

இரண்டாம் நாளில் கல்லூரி முதல்வர், நூல் திறனாய்வு எவ்வாறு இருக்க வேண்டும் என்று மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார். இந்த இரண்டு நாட்களிலும் 300- க்கும் மேற்பட்ட மாணவிகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். முதல் பரிசு ரூபாய் 5,000, இரண்டாம் பரிசு ரூ.4,000, ரூபாய் 3,000 இரண்டு நாட்களில் பரிசுகள் அறிவிக்கப்பட்டன.