சேலம் மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்டத்திலுள்ள காலிப் பணியிடங்களுக்கு தொகுப்பூதியம் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்ததாவது, தொட்டில் குழந்தை திட்டம் நிர்வாக நலன் கருதி சமூக நல இயக்குநரகத்திடமிருந்து குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தொட்டில் குழந்தை திட்டத்தை கண்காணிக்க மற்றும் மேற்பார்வையிடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்டத்திலுள்ள 5 எண்ணிக்கை காலிப் பணியிடங்களைத் தொகுப்பூதியம் மற்றும் தகுதியின் அடிப்படையில் பணியாளர்களைத் தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் காப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர் பணியிடத்திற்கு 12- ஆம் வகுப்பு தகுதியும், மாதாந்திர தொகுப்பூதியம் ரூபாய் 7,500, செவிலியர் (பெண் மட்டும்) பணியிடத்திற்கு டிப்ளோமா நர்சிங் தகுதியும், மாதாந்திர தொகுப்பூதியம் ரூபாய் 7,500, 2 உதவியாளர் (பெண் மட்டும்) பணியிடத்திற்கு 8- ஆம் வகுப்பு தகுதியும், மாதாந்திர தொகுப்பூதியம் தலா ரூபாய் 4,500, காவலர் பணியிடத்திற்கு 8-ஆம் வகுப்பு தகுதியும், மாதாந்திர தொகுப்பூதியமாக ரூபாய் 4,500 வழங்கப்படவுள்ளது.
இப்பணியிடங்களுக்கு நேர்காணல் குழு மூலமாக தகுதி வாய்ந்த நபர்களைத் தேர்வு செய்து தொகுப்பூதியம் மற்றும் தகுதியின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 42 வயதிற்குள் இருத்தல் வேண்டும். மேலும் குழந்தைகளை கையாளுதலில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண்.415, 4ஆவது தளம், மாவட்ட ஆட்சியரகம், சேலம்-636001 என்ற முகவரிக்கு 31/01/2025 தேதிக்குள் நேரில் கிடைக்கப் பெறுமாறு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


-SXgDfGgJfO.jpg)