சேலம் மாவட்டத்தில் இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு முகாம் நாளை (நவ.08) நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின், தீன் தயாள் உபாத்தியாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் 2024-25-ஆம் ஆண்டிற்கான, ஊரக பகுதிகளிலுள்ள 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ.
டிப்ளமோ, படித்த 18 வயது முதல் 45 வயது வரையுள்ள இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு 3 முதல் 6 மாதம் வரை இலவச திறன் வளர்ப்பு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் நாளை (நவ.08) காலை 10.00 மணியளவில் சேலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 20- க்கும் மேற்பட்ட திறன் வளர்ப்பு பயிற்சி நிறுவனங்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கலந்து கொள்கிறார்கள்.
திறன் வளர்ப்பு பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு இலவசமாக சீருடை. உணவு, தங்குமிட வசதி ஆகியவை தமிழ்நாடு அரசின் மூலமாக வழங்கப்படும். வேளாண்மைக்கு பயன்படுத்தப்படும் ட்ரோன் கருவி இயக்குதல் பயிற்சி, ஹோட்டல் மேனேஜ்மென்ட் பயிற்சி, நர்ஸிங் பயிற்சி. கம்ப்யூட்டர் பயிற்சி, ஆட்டோமோட்டிவ் கேட் பயிற்சி, கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி, சில்லரை வர்த்தக பயிற்சி, சமையல்கலை பயிற்சி, ஆயத்தாடை பயிற்சி, சி.என்.சி ஆப்ரேட்டர் பயிற்சி. வங்கி சார்ந்த பயிற்சி. பி.பி.ஒ பயிற்சி மற்றும் பல்வேறு இலவச பயிற்சிகளுக்கு தேர்வு நடைபெறவுள்ளதால் சேலம் மாவட்டத்தில் பயிற்சி பெற விருப்பமுள்ள விரும்பும் நபர்கள் தங்களது கல்விச்சான்று, ஆதார் அட்டை மற்றும் இதர கல்வித்தகுதி சான்றுடன் நேர்காணலில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் நேர்காணல் முகாம் தொடர்பான விவரங்களுக்கு 94440- 94337, 98657- 02761, 74027- 06911, 89460- 02970 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.



-hcTFAGMRGb.jpg)