ட்ரெண்டிங்

தூய்மைப் பணியாளர்களுக்கான மருத்துவ முகாம்! 


சேலம் மாவட்டம், ஓமலூர் ஊராட்சி ஒன்றியம், பச்சனம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் தூய்மைக் காவலர்களுக்கு நடைபெற்ற மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இன்று (செப்.21) நேரில் பார்வையிட்டார். 

பின்னர். மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தூய்மை பாரத இயக்கத்தின் தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் 2024 செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் குப்பைகளை கையாளும் முறைகள் குறித்து பொதுமக்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மரக்கன்றுகள் நடுதல், தூய்மை காவலர்களுக்கு நோய் தடுப்பு உடல் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் மேற்கொள்ளப்படும். இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம், ஓமலூர் ஊராட்சி ஒன்றியம், பச்சனம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்றையதினம் தூய்மை காவலர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

சேலம் மாவட்டத்தில் 20 ஊராட்சி ஒன்றியங்களில் 3,585 தூய்மை காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கான முதற்கட்ட மருத்துவ முகாம்கள் இன்று (செப்.21) மற்றும் செப்.28- ஆம் தேதி சனிக்கிழமை ஆகிய இரு நாட்களில் அரசு ஆரம்ப சுகாதாரங்களில் நடைபெறுகிறது. 

இன்றையதினம் நடைபெறும் இம்முகாமில் ஓமலூர் வட்டத்தைச் சேர்ந்த 6 ஊராட்சிகளில் உள்ள 81 தூய்மை காவலர்களுக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட பொது மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும், தூய்மை காவலர்கள் அனைவருக்கும் சீருடைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.