ட்ரெண்டிங்

சமரசத் தீர்வு மையம் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 1.13 கோடி இழப்பீட்டை வழங்கிய நீதிபத

சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சமரசத் தீர்வு மையம் மூலம் 1 கோடியே 13 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையை மாவட்ட முதன்மை நீதிபதி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார்

சேலம் மாவட்டத்தில் சமரசத் தீர்வு மையம் எனும் மக்கள் நீதிமன்றம் மாதந்தோறும் முதல் வாரத்தில் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இன்று (ஆகஸ்ட் 12) அஸ்தம்பட்டியில் உள்ள சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சமரசத் தீர்வு மையம் எனப்படும், மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. அப்போது, நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக மக்கள் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் முறையில் தீர்வு காணப்பட்டது 

குறிப்பாக, விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், மின்சார வாரிய வழக்குகள், காசோலை வழக்குகள், உரிமையியல் மற்றும் இதர வழக்குகள், சொத்துப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது

அந்த வகையில், கடந்த 2022- ஆம் ஆண்டு மணிராஜன் என்பவர் சன்மார் கெமிக்கல் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், இவர் திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்த போது, இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு கை, கால்கள் செயலிழந்தன. இது குறித்த வழக்கு சமரசத் தீர்வு மையம் மூலம் தீர்வு காணப்பட்டு, பாதிக்கபட்ட நபருக்கு 80 லட்சம் ரூபாய் இழப்பீட்டிற்கான காசோலையை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வழங்கினார். 

அதேபோல், கடந்த 2021- ஆம் ஆண்டு குரு என்பவர் இருசக்கர வாகனத்தில் சேலம் - ஓமலூர் தேசிய நெடுஞ்சாலை சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த ஆட்டோ மோதிய விபத்தில் கால் முறிவு ஏற்பட்டது. இந்த வழக்குக்கு இன்று தீர்வுக் காணப்பட்டு, குருவுக்கு 23 லட்சம்  ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. 

இன்று ஒரே நாளில் 3 வழக்குகளில் 1 கோடியே 13 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார். அப்போது நீதிபதி சரண்யா மற்றும் மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு செயலாளர் தங்கராஜ், வழக்கறிஞர்கள் ரகுபதி மற்றும் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.