ட்ரெண்டிங்

வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்த மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்! 

சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சிறப்புச் செயலாளர் முனைவர் சங்கர் இ.ஆ.ப. மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. ஆகியோர் இன்று (ஜூலை 05) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்விற்குப் பின் மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு அரசால் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் தரமாகவும், குறிப்பிட்ட காலத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதை உறுதிச் செய்திடும் வகையில் தமிழ்நாடு அரசால் அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

அந்த வகையில், இன்று காலை சேலம் மாநகராட்சி, அய்யந்திருமாளிகை அரசு துவக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவு தரமாகவும், சுவையாகவும், குறித்த நேரத்தில் சமைத்து வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து பள்ளிகளிலும் தொடர்புடைய அலுவலர்கள் நாள்தோறும் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு, திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து, சேலம் மாநகராட்சி. அஸ்தம்பட்டி மண்டலத்தில் ரூபாய் 8 கோடி மதிப்பீட்டில் பேர்லேண்ட்ஸ் முருகன் கோவில் முதல் ஆலமரத்துக்காடு வரை சுமார் 1.60 கி.மீ நீளத்திற்கு கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வரும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், சூரமங்கலம் மண்டலம், பள்ளப்பட்டி ஏரி அருகில் தேசிய சுகாதார இயக்கத்தின் சார்பில் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் உணவுத் தெரு அமைக்கப்பட்டு வருவதையும், சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூபாய் 14.01 கோடி மதிப்பீட்டில் பள்ளப்பட்டி ஏரி புனரமைத்து அழகுபடுத்தும் பணி நடைபெற்று வருவதையும், அதேபோன்று, ரெட்டியூரில் ரூபாய் 6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் கூடுதல் துணை சுகாதார மையக் கட்டடப் பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

சேலம் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவாய்த் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர். சூரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு மருந்து, மாத்திரைகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது குறித்தும், சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறியப்பட்டது.

அதேபோன்று, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் சேலம் ஊராட்சி ஒன்றியம், மல்லமூப்பம்பட்டி ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ரூபாய் 3.50 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் அமைத்திடத் தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளியின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், மல்லமூப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூபாய் 27.63 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய வகுப்பறைக் கட்டடம் கட்டும் பணி நடைபெற்றுவருவது ஆய்வு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தளவாய்ப்பட்டி ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தளவாய்ப்பட்டி முதல் பெத்தானூர் வரை நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளையும், கிராமப்புற வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ் சடையாண்டியூர் பகுதியைச் சேர்ந்த சின்னபொன்னு என்பவரின் வீட்டினை ரூபாய் 1.46 லட்சம் மதிப்பீட்டில் பழுது பார்க்கப்பட்டு வரும் பணியினையும், மஜிராக்கொல்லப்பட்டி ஊராட்சியில் ரூபாய் 16.75 லட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது குறித்தும் ஆய்வு
செய்யப்பட்டது.

கந்தம்பட்டியில் உள்ள சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் நாள்தோறும் வழங்கப்பட்டு வரும் பணிகள் குறித்தும், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, உத்தமசோழபுரம் ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் திருமணிமுத்தாற்றின் குறுக்கே ரூபாய் 5.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலப் பணிகளையும், சின்னசீரகாபாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 2.99 கோடி மதிப்பீட்டில் 14 புதிய வகுப்பறைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதையும், எட்டிமாணிக்கம்பட்டியில் ரூபாய் 80 லட்சம் மதிப்பீட்டில்
அருவங்காடு முதல் எட்டிமாணிக்கம்பட்டி வரையிலான சாலை மேம்படுத்தப்பட்டுள்ள பணியினை ஆய்வு மேற்கொண்டு நிர்ணயிக்கப்பட்ட அளவீட்டில் உரிய தரத்துடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இன்றைய தினம் சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ரூபாய் 34.83 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சிறப்புச் செயலாளர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து. இன்று பிற்பகல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) லலித் ஆதித்ய நீலம் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப., மாநகரப் பொறியாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.