ட்ரெண்டிங்

"ஆக.15- ல் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்"- மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவிப்பு!

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் ஆகஸ்ட் 15- ஆம் தேதி சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஒன்றிய, மாநில அரசு ஆணைகளின் படி, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதிச் செய்வது குறித்து விவாதித்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதியோ வழங்குதல், அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்துதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. 

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், என்னுடைய தாய் மண், எனது தேசம் நிகழ்ச்சிக்காக மரக்கன்றுகள் நடுதல், ஊராட்சியில் தற்போது நடைபெறும் அனைத்து பணிகள், கனவுப்பள்ளிகள், ஊரக விளையாட்டு மைதானம், சீமைக்கருவேல மரம் அகற்றுதல், நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுதல், ஊராட்சியின் சிறப்பு பிரச்சனைகள் அல்லது தேவைகள், கல்வி அறிவு, பெண் கல்வியறிவு சதவீதம், ஆண், பெண் குழந்தை பிறப்பு விகிதம் மற்றும் அரசின் பிற முக்கிய திட்டங்கள் குறித்த விவரங்கள் பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்படவுள்ளது. 

மேற்கண்ட கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது." இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.