ட்ரெண்டிங்

"ஆகஸ்ட் 15- ல் அனைத்து மதுபானக் கடைகள், மதுபானக் கூடங்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு!"

சுதந்திர தினத்தை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் 15- ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு அரசால் வருகின்ற ஆகஸ்ட் 15- ஆம் தேதி சுதந்திர தினத்தன்று மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகள், மதுபானக் கூடங்கள் மற்றும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக் கூடங்கள் அனைத்தும் வருகிற ஆகஸ்ட் 15- ஆம் தேதி அன்று மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 

மேற்கொண்ட தினத்தில் உத்தரவுகளை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்". இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.