ட்ரெண்டிங்

சேலத்தில் கோர விபத்து- நிதியுதவியை அறிவித்த முதலமைச்சர்! 

சேலம் மாவட்டம், சுக்கம்பட்டியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேலம் மாவட்டம், வலசையூர் அருகே சுக்கம்பட்டி கிராமத்தில், அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் இன்று (ஜூன் 12) காலை சுமார் 10.40 மணியளவில் அரூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற லாரி ஒன்றின் பின்னால் 2 இருசக்கர வாகனங்களில் சென்றுக் கொண்டிருந்தவர்கள் மீது, ஆச்சாங்குட்டப்பட்டியிலிருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து எதிர்பாராத விதமாத மோதிய விபத்தில் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நில அளவையராக பணிபுரிந்து வந்த முருகன் (வயது 30) மற்றும் அவரது மனைவி நந்தினி (வயது 25) மற்றும் பூவனூரைச் சேர்ந்த வேதவள்ளி (வயது 28) ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இவ்விபத்தில், முருகன் மற்றும் நந்தினி தம்பதியரின் ஒரு வயது குழந்தை கவின் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தது என்ற துயரகரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையுமடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.