ட்ரெண்டிங்

பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு- ஆட்சியர் நேரில் ஆய்வு! 

கோடைவிடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று (ஜூன் 10) திறக்கப்பட்டுள்ளதையொட்டி சேலம், மணக்காடு காமராஜர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி இ.ஆ.ப. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

ஆய்விற்குப் பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் இன்றைய தினம் திறக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவ, மாணவிகள் ஆதார் பதிவு மற்றும் புதுப்பிக்க நிரந்தர ஆதார் மையத்திற்கு பயணிக்க வேண்டிய நிலையினை தவிர்த்து தாம் பயிலும் பள்ளியிலேயே ELCOT-ன் அங்கீகரிக்கப்பட்ட முகவர் மூலம் ஆதார் எண் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தலை மேற்கொண்டு பயன்பெற பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், சேலம் மாவட்டத்தில் அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவிகளில் புதிதாக ஆதார் எடுக்கவும் மற்றும் புதுப்பிக்கும் தேவை உள்ள மாணவ, மாணவிகளுக்கு புதுப்பித்தல் பணியை மேற்கொள்ளவும் சேலம் மாவட்டத்தில் வட்டாரம் வாரியாக அட்டவணை தயார் செய்யப்பட்டு சிறப்பு முகாம்கள் பள்ளிகளிலேயே நடத்தப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, தேவையுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இந்த முகாம் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. இம்முகாமினைப் பயன்படுத்திக் கொண்டு மாணவ, மாணவிகளுக்கு ஆதாரில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் மற்றும் புதிய ஆதார் எண்களைப் பெற்றுத்தரவும் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மாணவ, மாணவிகள் அனைவரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.