ட்ரெண்டிங்

கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம்! 

சேலம் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு 5-ஆம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பிருந்தாதேவி இ.ஆ.ப. சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் முன்னிலையில் இன்று (ஜூன் 10) தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கமும் இணைந்து இன்று முதல் ஜூன் 30- ஆம் தேதி வரை அனைத்து கால்நடைகளுக்கும் இலவசமாக தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 5- வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்பட்டு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

கோமாரி நோய் இரட்டைக் குளம்பின கால்நடைகளை தாக்கி காய்ச்சல் மற்றும் கொப்புளங்கள் ஏற்படுத்தும் நச்சுயிரி தொற்று நோய் ஆகும். பண்ணையில் சுகாதாரமற்ற பராமரிப்பு மற்றும் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், உமிழ்நீர் மற்றும் பண்ணைக்கழிவுகள் மூலம் இந்நோய் எளிதில் பரவுகிறது. கோமாரி நோயினால் மாடுகளில் சினைபிடிக்காமல் போவது, பால் உற்பத்தி குறைதல், தோல் மற்றும் தோல் பொருட்களின் மதிப்பு இறக்கம், எருதுகளின் வேலைதிறன் பாதிப்பு மற்றும் கன்றுகளில் அதிக இறப்பு ஆகியவை ஏற்பட்டு கால்நடை வளர்ப்போருக்கு பெரும் இழப்பு நேரிடுகிறது. இக்கொடிய நோயை தடுக்கும் பொருட்டு கோமாரி நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 6 மாதங்களுக்கு ஒருமுறை அனைத்து மாட்டினம் மற்றும் எருமை இனங்களுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் இன்றையதினம் ஜூன் 10- ஆம் தேதி முதல் ஜூன் 30- ஆம் தேதி வரை அங்கீகரிக்கப்பட்ட செயல் திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் 4 மாத வயதுக்கு மேற்பட்ட சுமார் 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தொடர்புடைய ஊராட்சியில் உள்ள கால்நடை மருந்தக பகுதிகளில் 149 குழுக்கள் மூலம் முன்கூட்டியே தக்க விளம்பரம் செய்து தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், 5-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணி நடைபெறுகிறது.

எனவே, விவசாய பெருமக்கள் தங்கள் பகுதிகளில் தடுப்பூசி போடப்படும் நாளில் தவறாது தங்களது கால்நடைகளைக் கொண்டு வந்து இலவசமாக தடுப்பூசி போட்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்தார்.