தனது பிரதமர் பதவி மற்றும் மத்திய அமைச்சரவையை ராஜினாமா செய்தார் நரேந்திர மோடி. இது தொடர்பான ராஜினாமா கடிதத்தையும் குடியரசுத்தலைவரிடம் வழங்கினார்.
18- வது மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 291 தொகுதிகளை வென்று அபார சாதனை படைத்தது. எனினும், பா.ஜ.க. 240 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில், கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலையில் பா.ஜ.க. உள்ளது. மற்றொருபுறம் 230 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றுள்ள இந்தியா கூட்டணி, நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த சூழலில், மத்திய அமைச்சரவைக்கு பின் குடியரசுத்தலைவரை சந்தித்த நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங், அமித்ஷா ஆகியோர் அமைச்சரவை பதவி விலகல் கடிதத்தை வழங்கினர். மேலும் 17- வது மக்களவையை கலைக்கும் தீர்மானத்தையும் குடியரசுத்தலைவரிடம் வழங்கினர்.
ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட குடியரசுத்தலைவர், புதிய அரசு அமையும் வரை காபந்து பிரதமராக மோடி நீடிப்பார் என அறிவித்துள்ளார்.