சேலத்தில் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அன்னதானப்பட்டியில் உள்ள கண்ணகி நகரில் கூலித் தொழிலாளி மாது வசித்து வருகிறார். வழக்கம் போல், வேளையை முடித்துக் கொண்டு நேற்றிரவு வீட்டிற்கு வந்து மாது உறங்கியுள்ளார்.
அப்போது, இன்று (மே 23) அதிகாலை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் உறங்கிக் கொண்டிருந்த மாது இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த அன்னதானப்பட்டி காவல்துறையினர், மாதுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.